இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..! அனைத்தும் நீயே...!!
சர்வம் சிவார்ப்பணம்...!!!
சித்தன் அருள் - 996 - அன்புடன் அகத்தியர் - பொதிகை நாடி வாக்கு-1!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
திரு.ஜானகிராமன்
அவர்கள், நாடியில் வாசிக்கும் விஷயங்களை ஒரு தலைப்பின் கீழ் வெளியிட,
வாசகர்களிடம், ஒரு தலைப்பை சொல்லுங்களேன், என கேட்டிருந்தேன். நிறைவாக
அகத்தியர் அடியவர்கள் நிறையபேர் பலவித தலைப்பை கூறியிருந்தனர். அவற்றை
குருநாதரிடம் சமர்ப்பித்து கேட்ட பொழுது "அன்புடன் அகத்தியன்" என்ற தலைப்பு
அவரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தலைப்பை அகத்தியர் அடியவர் உமாராணி
என்பவர் கூறியிருந்தார். அவருக்கும், வேறு பல தலைப்பையும் கூறிய, அனைத்து
அகத்தியர் அடியவர்களுக்கும் அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்
வலைத்தளத்தின் "நன்றி"யை தெரிவித்துக்கொள்கிறேன். நலமாய் வாழ்க!
முதன் முதலாக, அகத்தியப்பெருமானுடன் ஆன நாடி வாக்கு யாத்திரையை "பொதிகையிலிருந்து" தொடங்குவோம்.
2021இல்
ஒரு அகத்தியர் குழுவானது, பொதிகை சென்று அகத்தியப் பெருமானுக்கு அபிஷேக
பூசைகள் செய்தனர். அந்த குழுவில் இருந்த, திரு ஜானகிராமன் அவர்கள்,
பூசைக்குப் பின் அகத்தியரிடம் பொது அருள் வாக்கு கேட்டார். அவர் நாடியில்
வாசித்ததை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக கீழே தட்டச்சு செய்து
சமர்ப்பிக்கிறேன்.
"அப்பனே நலன்கள் ஏகும்! காண
வந்தீர்கள், எவை என்று கூறாமல்! அப்பனே அத்தனை அனுக்ரகங்கள்.
ஒவ்வொருவரையும் யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். அப்பனே கவலை
இல்லை. ஆனாலும் வரும் காலம் அழியும் காலம் என்பேன். அப்பனே!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள், கட்டங்கள் வந்து கொண்டே
இருக்கும். இருந்தாலும் அப்பனே! என்னை நம்பியவர்களை ஒரு பொழுதும்
கைவிட்டதாக சரித்திரம் இல்லை. அப்பனே வரும் காலங்களில் இதைத்தான்
சொல்லுகின்றேன்.
ஈசனும் வரும் காலங்களில் பலவித
கட்டங்களை கொடுப்பான். என் பக்தர்களை, கூடவே இருந்து கட்டங்களிலிருந்து
காப்பேன் என்று இப்பொழுது உத்தரவு அளிக்கின்றேன். எவ்வாறு என்றும் கூட,
முடியாமல் பின் எவ்வாறு தாழ்ந்து வந்தீர்கள் என்று கூட என்னால் பார்க்க
முடிந்தது. அப்பனே இருந்த போதிலும், என் ஆசிகள் பரிபூரணம் என்பேன்.
அப்பனே,
இங்குள்ளவருக்கும், ஒவ்வொருவருக்கும் நான் பார்த்து ஆசிர்வதித்துவிட்டேன்
என்பேன், அவரவர் வழியில் செல்ல. அப்பனே, ஆனாலும் துன்பங்கள் நீங்காது, ஏன்
என்றால் இது கலியுகம். அகத்தியன் என்று சொன்னாலே மோட்சம்தான். ஆனாலும் சில
சில வினைகளால், கட்டங்கள் வரும், அதையும் நான் தீர்த்து வைத்துவிட்டால்,
பின் மனித பிறப்பிற்கு சரித்திரமே இல்லாமல் போய்விடும். இதனால் நன்கு
உணர்ந்து எதனை செய்வது என்றும், எதனை செய்யக்கூடாது என்பதும் எந்தனுக்கு
தெரியும். பின்பு சிறிது கட்டங்கள் வந்தாலும், அதுவும் நன்மைக்கே என்று
எடுத்துக்கொள். ஆனாலும் இன்பமே வந்துவிட்டாலும், மோக்ஷ கதியை அடைய
முடியாது. அப்பனே, அகத்தியனை வணங்குபவர்கள்,நிச்சயமாய் மோக்ஷகதியை
அடைவார்கள். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக கட்டங்கள் வந்து
கொண்டிருக்கும். அதையும், தனிப்பாதையாய் மாற்றுகிறேன். அப்பனே, இப்பொழுது
சொல்கின்றேன், அனைவருக்கும், இது மோக்ஷ பிறப்பு. அது எப்படி என்று
உணராமலேயே என்னை வந்து கண்டுவிட்டீர்கள். ஆனால் நானும் வழியில் உங்களோடு
வந்தேன் என்பேன். அதனால், தொல்லைகள் இல்லை, தொல்லைகள் வராது என்பேன்.
அப்பனே, எவை என்று சிந்தித்துப் பார்த்தால், பொய்யான உருவங்கள், பொய்யான
பக்தர்கள், பொய்யானவர்கள், நிறைய வருவார்கள். அப்பனே நம்பிக்கையாக
இருங்கள், அகத்தியன் இருக்கிறான் என்று. ஆனாலும், யாரையும், இனிமேல்
நம்புதல் கூடாது என்பேன். அப்பனே, நான் அதை செய்வேன், இதை செய்வேன்
என்றெல்லாம் வருவார்கள். எம்மை நம்பிவிட்டால், (அவர்களால்) ஒன்றும் செய்ய
இயலாது என்பேன். அகத்தியன் இருக்கின்றான் என்ற ஒரு வார்த்தையை
சொல்லிவிடுங்கள். அனைவருக்கும், ஆசிகளாக, எந்தனுக்கு அகத்தியன்
இருக்கின்றான் என்று சொல்லிவிடுங்கள். ஆனாலும், நிறைய பேர்கள் வருவார்கள்.
அதனை செய்கின்றேன், இதனை செய்கிறேன் என்பார்கள். அதனால் ஒன்றும்
பிரயோசனமில்லை, கட்டங்கள்தான் வரும். இங்கு இறைவனின் சக்தியை விட உயர்ந்தது
எதுவும் இல்லை. அதனால்தான் சொல்லுகின்றேன்.
அதை
செய்தால், இது நடக்கும், இதை செய்தால் அது நடக்கும் என்று கூட பணத்துக்காக
வருவார்கள். அப்பனே! இன்றே உரைக்கின்றேன், சூட்சுமமாக. யாரையும்
நம்பிவிடாதீர்கள். அப்பனே என்னை நம்பிவிட்டீர்களா, என்னையே நம்பி
விடுங்கள். அப்பனே, வழியை நல்ல வழியாக யாம் காண்பிக்கிறேன். அப்பனே,
தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என்
பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே
கோடி புண்ணியமாகும். இதை விட்டுவிட்டு மற்றவைகளை நம்பி போனால், எவை என்று
தெரியாத அளவுக்கு, கட்டங்களை அள்ளித்தந்து போவார். அப்பனே! ஈசன் நடத்தும்
நாடகத்தில், அழியும் காலம் வந்துவிட்டது. அப்பனே, ஒவ்வொரு வினைகளாலும்
மனிதன், மனிதனை அழித்துக் கொள்வான்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அன்புடன் அகத்தியர்.....தொடரும்!


Comments
Post a Comment